Friday, January 30, 2009

எழுத்தாளர் கடத்தல்: சோடிக்கப்படும் குற்றங்கள்!





என்.சரவணன்

எங்களோடு வர இருந்தவரும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் மும்முர­மாக இருந்தவருமான நண்பர் மது கைது செய்­யப்­­பட்டுள்ள அவலகரமான நிலையி­லேயே நாங்­கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்­கிறோம். இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து கொண்டி­ருக்கும் நிலையில் எங்களுக்கெல்­லாம் கௌரவிப்பு எதற்கு? இப்படிப்பட்ட நிகழ்ச்சி தான் எதற்கு? நாங்கள் இந்த நிகழ்ச்சியையே நடத்தாமல் எமது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்...”

இவ்வாறு சிறந்த சிறுகதைத் தொகுதிக்­காகக் திருமலை­­­­­­யில் நடந்த தமிழ் இலக்கிய விழாவின் போது கௌரவிக்கப்பட்ட மு.பொன்­­னம்­பலம் அவர்கள் அங்கு பேசும் போது தெரிவித்தார். மு.பொவின் இந்தப் பேச்சு இன்றைய எமது அவலத்தைத் துலாம்­பரமாக எடுத்துக் காட்டியது. மு.பொவின் இந்தப் பேச்சு அந்த மேடை­யிலிருந்த சிலருக்கு நாரசமாய் இருந்திருப்­பினும், பெரும்பாலானோர் அதனைத் தமது இதயத்தின் குரலாகவே கண்டனர். மு.பொ. பேசி முடிந்ததும் அவரிடம் முனைவர் அரசு நீங்கள் இதனை இந்த இடத்தில் தெரிவிக்கா­மல் இருந்திருந்தால் நான் தெரிவித்திருப்பேன் என்றார்.

விபவி மாற்று கலாசார நிலையத்­தினரால் வெளியிடப்படும் செய்தி இதழின் ஆசிரியரும், சரிநிகரில் இலக்கியப் பத்தி­களை எழுதி வருபவரும், இலக்கிய எழுத்­தா­ள­ரு­மான தெ.மது­­சூதனன் கைது செய்யப்பட்டு ஒரு வாரமும் தாண்டி விட்டது.

இதுவரை பொலிஸ் தரப்பில் கைதுக்­கான காரணம் எதுவும் உத்தியோக­பூர்வமாகத் தெரிவிக்­கப்படவில்லை.

கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மாலை 5.50 மணியளவில் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த முனைவர் வி.அரசு, மற்றும் ராஜேந்திரம் ஆகியோருடன் காலி வீதியில் ”ஹோலி பெமிலி கொன்வன்ட்” பாடசாலைக்கு அருகில் வைத்து இனந்­தெரியாத சிவில் உடை தரித்த நபர்க­ளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் மதுசூதனன்.

இந்தக் கைது எப்படி நடந்தது? பேராசிரியர் அரசு இப்படி விளக்குகிறார் நானும் என்னுடன் தமிழ்­ நாட்டிலிருந்து வந்திருந்த பேராசிரியர் இராஜேந்திரனும் நண்பர் மதுவுடன் பம்பலப்பிட்டி கிறீன்ஸ­்லண்ட் ஹோட்ட­லி­லி­ருந்து புறப்பட்டு காலி வீதியில் உரையாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தோம். கொன்­வென்ட்­க்கு அருகில் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் திடீரென்று மதுவின் தோளில் கையைப் போட்டுப் பிடித்துக் கொண்டார் முதலில் மதுவின் கையைப் பிடித்தவர் அவருக்கு மிக நெருக்கமான நண்பர் யாரோ என நினைத்த போதும் மறுகணமே அந்தப்பிடி ஒரு பொலிசாருடைய பிடி என்பதை உணர்த்திற்று. நாம் சுதாகரித்துக் கொள்ள முன்னரே அவர் ஜீப்பினுள் ஏற்றப்பட்டர். மதுவைப் பிடித்து ஏற்றியவர் வெள்ளை நிற ரீ சேர்ட்டும் நீல நிற முழுக்­காற்சட்டையும் அணிந்திருந்தார் ஜீப்பினுள் இருந்த ஏனை­யோர் சீருடையில் இருந்திருக்­கிறார்கள். கணநேரத்துள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. நாங்கள் அதிர்ந்து போனோம்.

பிறகு என்ன நடந்தது?

பொலிஸ் நிலையங்களுடனும், மனித உரிமைகள் அமைப்புகள் பலவற்றுடனும், தமிழ்-சிங்கள அரசியற் தலைவர்களுடனும், பத்திரிகையாளர் அமைப்புகள், வழக்கறி­ஞர்கள், மனித உரிமையாளர்கள் என்போ­ரால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட ஏறத்தாழ 17 மணித்தியாளங்கள் வரை ”மது” யாரால் கொண்டு செல்லப்பட்டார்? எதற்காகக் கொண்டு செல்லப்பட்டார்? எங்கு வைக்கப்பட்­டி­ருக்கிறார் என்பதை அறிய முடியாதிருந்தது.

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொள்­ளுப்­பிட்டி, கிருலப்பனை, நாரஹேன்பிட்டி என்று ஒவ்வொரு பொலிஸ் நிலையமாக விசாரித்த போதும் தாம் கைது செய்ய­வில்லை என்றும், தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றுமே பதில் கிடைத்தது. இடையில் ஒரு தடவை­­ பம்பலப்பட்டி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்­பட்டி­ருக்கிறார் என்கின்ற ஆறுதல் செய்தியும் கூட பின்னர் விசாரித்ததில் பொய்யானது.

இறுதியில் மறு நாள் ஒரு பத்திரிகை­யாளர் மூலமாக பேலியகொட பொலிஸில் தடுத்து வைக்கப்­பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. தகவ­ல­றிந்து மதுவைப் பார்க்கச் சென்ற தகப்ப­னாரை சந்திக்க பொலிஸார் விடவும் இல்லை. கைதுக்­கான காரணம் எதனையும் தெரிவிக்க­வுமில்லை.

கைது செய்யப்பட்ட அன்று புதிதாக ஜனாதிபதியால் தலைமை தாங்கும் வகையில் அமைக்­கப்பட்ட தொல்லைத் தவிர்ப்பு குழு­வுக்கு, மனித உரிமைகள் நடவடிக்கைக் குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்று­டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் தொலைபேசியை எடுக்க அங்கு எவரும் இருக்கவில்லை. ஆயினும் அக்­குழுவின் உறுப்பினர் ஒருவரூடாக அவர்களு­க்குத் தகவல் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மது மீது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

28ஆம் திகதியன்று தொடக்கம் மது 6ஆம் மாடிக்கு சீ.ஐ.டி.யின் தலைமை­யகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று வரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை திறந்த பல்கலைக்­கழகத்தில் கற்கும் மதுவின் இரு சகோதரர்­களும் வீட்டில் வைத்து மது ராகவன் (23), மது சொருபன் (22) கைது செய்யப்பட்டு அவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்­பட்டுள்ளனர்.

இது குறித்து மனித உரிமைகள் நடவடிக்­கைக் குழு எனும் அமைப்பு சர்வ­தேச ரீதியில் பல மனித உரிமைகள் அமைப்பு­களுக்கு தெரிவித்து ஜனாதிபதி, ஜனாதிபதி­யின் செய­லாளர் பாலபட்டபந்தி, தொல்லைத் தவிர்ப்பு குழுவின் செயலாளர் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி போன்றோரின் விலாசம், பெக்ஸ் இலக்கம் என்பவற்றை வெளியிட்டு, இந்த மோசமான அடிப்படை உரிமை மீறலை எதிர்­த்து பொறுப்புமிக்கவர்களை நடவ­டிக்கை எடுக்­கக் கோரும்படி சகல மனித நேய அமைப்­புகளையும் வேண்டி இன்டர்­நெட், மற்றும் ஈ.மெயில் என்பவற்றுக்கூடாக சர்வதேச ரீதியில் முயற்சிகளை மேற்கொண்­டுள்ளது.

இதனைச் செய்து இரு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 1ஆம் திகதியன்றி­லிருந்து ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு ”அக்கடிதம் தங்களுக்கு கிடைத்­தமை குறித்­தும் அதன்மீது முறைப்­படி நடவடிக்கை எடுக்­கத் தொடங்கி­யிருப்பதாகவும் மேற்படி இயக்­கத்­துக்கு பதிலளித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த இனவெறிக்கெதிரான கலைஞர்கள் (Artists Against Racism) என்ற அமைப்பு தம்­மு­­­­டன் தொடர்புடைய அமைப்பு­களுக்­கூடாக இதனை மேற்கொள்வதாகவும் மேலதி­கமாக தெரிவிக்க வேண்டிய சர்வதேச அமைப்புகளின் முகவரிகளையும், இன்டர்நெட் வெப்தள மற்றும் ஈ.மெயில் விலாசங்களையும் கொடுத்துள்ளது.

இது போன்ற இன்னுமொரு அறிக்­கையை தொல்லைத் தவிர்ப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்­துள்ள சுதந்திர பத்திரிகை­யாளர் இயக்­கம் சகலரையும் விழிப்புடன் இதனை கண்டி­க்கும்படி கோரியிருக்கிறது. இவ்வமைப்­பும் மேற்படி கண்டனங்களை தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமரவீர­வுக்கும், நீதி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுக்கும் அறிவிக்கும்படி கோரி அவ்வறிக்கையில் அமைச்சர்களின் விலாசங்களைக் குறிப்­பிட்டுள்ளது.

வழமைபோல சிங்கள பத்திரிகைகளின் அழுத்தம் அக்கறை குறைவான போதிலும் இந்தளவு ஆதரவுச் சக்திகளும் இருப்பது தமிழ் பத்திரிகையாளர்களை ஓரளவு நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

மதுவை விடுதலை செய்வதற்கு இவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டு வரும் இதே வேளை பொலிஸார் தரப்பில் புதிய புதிய சோடனைக் கதைகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்தி­யோகபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்காத பாதுகாப்­புத் துறையினர் வெவ்வேறு தரப்பினருக்கு தொpவித்­துள்ள கருத்துக்கள் வேடிக்கை­யானவை. ஆரம்பத்­தில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்த பேராசிரியர்களை புலிகளின் பிரதேசங்­களுக்கு அழைத்துச் செல்வதாக தொலை­பேசியின் மூலம் உரையாற்றியதை தாங்கள் பதிவு செய்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்­ளனர். ஆனால் முனைவர் அரசு அவர்களிடம் இது குறித்து வினவிய போது ”நான் வந்தது தொடக்கம் அவரை தொலை­பேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசி­யமே இருக்கவில்லை. மது எங்களுடன் தான் அதிக நேரம் இருந்தார். பின்னர் எப்படி தொலை­பேசி உரையாடலை பதிவு செய்த­தாக தெரிவிப்பர்? அது நிச்சயம் பொய்..!” என்றார்.

கைது செய்யப்பட்ட பாதாளலோக நபர் ஒருவருக்கும் மதுவுக்கும் தொடர்பு இருக்­கிறது. அதனால் தான் மது கைது செய்யப்­பட்டதாக இன்னொரு தகவல் வெளியிடப்­பட்டிருக்கிறது.

புலிகளுடைய அரசியற் பிரிவுக்கும் மதுவு­க்கும் தொடர்பிருப்பதாக இன்னொரு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இறுதியாகக் கிடைத்த இன்னொரு தக­வல் பொலிஸார் எவ்வாறு மொட்டந் தலைக்­கும் முழங்காலுக்குமிடையே முடிச்­சுப் போடு­வார்கள் என்பதை விளக்குகிறது. தமிழ்­நாட்டிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் இரா­ஜேந்திரன் தி.மு.க கருணாநிதிக்கு நெருக்க­மானவர். கருணாநிதி திராவிட கழக நெடு­மாற­­னுக்கு நெருக்கமானவர். நெடு­மாறன் புலிக­ளுக்கு நெருக்கமானவர். ஆக, மதுவுக்­கும் புலிகளுக்கும் உறவு இருக்­கிறதாம். எப்படி இருக்கிறது பொலிஸா­ருடைய கன்டுபிடிப்பு?

இவையெல்லாம் மதுவைக் காரண­மின்றிக் கைது செய்த பொலிஸார் ஏதாவது காரணம் ஒன்றைச் சோடிக்க முயல்வதைக் காட்டுகிறது அல்லவா?

இது மதுவுக்கு மட்டும் நேரும் விடயம­ல்ல. இன்று கைது செய்யப்படுகிற பெரும்­பாலான தமிழ் இளைஞர் யுவதிகளிள் நிலையும் இது தான்.

கைது செய்யப்படும் போது கைதுக்­கான காரணத்­தைத் தெரிவிக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும், கைது செய்யப்படுபவர் காரண­மின்றி தடுத்து வைக்கப்படுதல் தவிர்க்­கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவரை அவருடைய நெருங்கிய உறவினரோ, சட்டத்­தரணியோ பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுக் கொண்டே போகும் அப்பாவிகள் தண்டிக்கப்படலாகாது எனும் நோக்கிலான விடயங்கள் எவையும் இன்ன­மும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தொpய­வில்லை. இலங்கையில் பணியாற்றும் மனித உரிமை நிறுவனங்களும் இது தொடர்பாக அவை விடுத்த அறிக்கைகளையும், மேற்­கொண்ட நடவடிக்கை­களையும் அரசு கண்டு கொண்ட­தாகவே தெரியவில்லை.

இலங்கையின் சிங்கள பௌத்த பேரின­வாத அரசிடம் - அது எவ்வளவு தான் மனிதா­பிமான முகமூடியை அணிந்து கொண்ட போதும் - நீதியை எதிர்பார்ப்பது மடமை அல்லவா என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!