Friday, January 30, 2009

அரட்டுவ தரகு முதலாளித்துவ பத்திரிகை?


என்.சரவணன்

”இலங்கையின் முதலாவது பொருளியல் பத்திரிகை” என்கின்ற தடித்த எழுத்துடன் சேர்த்து ”அரட்டுவ” என்கின்ற பெயரில் வாராந்தப் பத்திரிகையொன்று நவம்பர் தொடக்கம் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

பொருளியல் விவகாரங்களை வெளிக் கொணர்கிற அரட்டுவ என்கின்ற இந்தப் பத்திரிகையின் தமிழ் அர்த்தம் ”மரவைரம்” என்பதே.

உண்மையிலேயே இந்தப் பத்திரிகை பொருளியல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்கென்றே உருவாக்கப்­பட்டிருக்கிற பத்திரிகை தான். உள்ளூர் வெளியூர் பொருளியல் நிலமைகள், அதன் தந்திரோபாயங்கள் மற்றும் அவை குறித்த செய்திகள், பேட்டிகள், ஆய்வுக் கட்டுரைகள், சந்தை நிலவரங்கள் என்பனவற்றை வெளியிட்டு வருகிறது. சுருக்கமாகக் கூறுவதானால் இந்தப் பத்திரிகை இலங்கையின் உள்ளுர் முதலாளிமார் சிலரின் சந்தை வாய்ப்புகளை பலப்படுத்துகின்ற வகையில் தங்களின் பலத்தை வெளிக்காட்டுவதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள பத்திரிகையென்பதையே காட்டுகிறது.

”சர்வதேச வலைப் பின்னலுடன் (internet) இணைத்துக் கொண்ட இலங்கையின் முத­லாவது பொரு­ளியல் பத்திரிகை” என்று ஆசிரியர் தலை­யங்கப் பகுதியில் குறிப்பி­டப்பட்டுள்ளது. அதன் வெப் தளத்தின் விலா­சம் WWW.waratuwa.lk என்று குறிப்பிட்டுள்ளது.

அதே ஆசிரியர் தலையங்கப் பகுதியில் ஆசிரியரின் பெயருக்கு முன் ஆரம்பகர்த்தா-'லலித் கொத்தலாவல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உங்களுக்கு ஓரளவு பின்னணி விளங்கியிருக்க வேண்டும்.

லலித் கொத்தலாவல வேறு யாருமல்ல செலிங்கோ நிறுவனம், செய்லான் வங்கி, புளு டயமன்ட் நிறுவனம் என இலங்கையின் முக்கிய பல நிறுவனங்களின் இயக்குனரும் இலங்­கையின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவருமான இவர் பொருளாதாரத் துறையில் மாத்திரமல்ல சமீப காலமாக அரசியல் விவகாரங்களிலும் பேசப்படுபவர்.

லலித் கொத்தலாவல-பின்னணி

இனப்பிரச்சினையில் சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியெனக்கூறி சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தை சமரச முயற்சியென ஆரவாரங்களைப் புரிந்து கொண்டிருந்த வர்த்தக சமூகத்தின் தலைவரும் இவர் தான். இலங்கை அரசின் ”தேசமான்ய” விருதினைப் பெற்றவர். இதைத் தவிர இவரைப் பற்றி எவரும் அறியாத கதையொன்றும் உண்டு. சிங்கள வீரவிதான இயக்­கத்துடன் மறைமுகமாக பணிபுரிகின்ற முக்கிய தொழிலதிபர்களில் இவரின் பெயரும் உண்டு. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இறங்கியிருக்கும் வர்த்தக சமூகத்துடன் இவரும் இறங்கியிருந்தபடியால் இவருக்கும் சிங்கள வீரவிதான இயக்கத்துக்கும் உறவு தற்போது சுமுகமாக இல்லையென்கின்ற கதையும் அடிபடுகின்றது.

இந்தப் பத்திரிகையில் தொடர்ச்சியாக வர்த்தகப் பிரச்சினைகள் எனும் பகுதியில் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் லலித் கொத்தலாவல. தனது வர்த்தக நிறுவனங்கள் அனைத்தினதும் விளம்பரங்கள் இதில் இடம்பெறுகின்றன. 12 (Droadsheet size) பக்கங்களில் நான்கில் ஒரு பகுதி இப்படியான விளம்பரங்களைக் கொண்டுள்ளன.

ஏன் திடீரென்று இப்பத்திரிகையை இவர் ஆரம்பிக்க வேண்டுமென்கின்ற கேள்விக்கு பல்வேறு கதைகள் உண்டு.

94 மாயையும்
பத்திரிகைகளின் வீழ்ச்சியும்

இது ஒரு கிளர்ச்சி அலை உள்ள காலமாக இல்லை. முன்னர் பிரேமதாச காலத்தில் இருந்த ஒருவித கிளர்ச்­சித்தனமான ஆரவாரமான அரசியல் ஆர்வமும் உணர்ச்சிமி­குந்ததுமான காலமாக இது இல்லை. 94இல் பொது ஜன ஐக்கிய முன்னணியை பதவியில் அமர்த்துவதில் பாரிய பாத்திரத்தை பத்திரிகைகளும், வெகுஜன மற்றும் தன்னார்வ இயக்கங்களும், புத்திஜீவிகளும் ஆற்றியிருந்தனர். அந்த மாயையிலிருந்து இன்னும் விடுபடாதோர் பலர். இந்த அரசாங்கத்தை அம்பலப­்படுத்துவது தங்களின் முன்னைய நிலைப்பாட்டை சந்தேகிக்கச் செய்யும் என்றும் நேர்மையாக ஒத்துக்கொள்வதை கௌரவப் பிரச்சினையாக கொண்டும் இன்னும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் தரப்பினர் சிலர். இவர்கள் வெறும் தனிநபர்களாக மாத்திரமல்ல அமைப்பு ரீதியான சக்திகளாகவும் உள்ளனர்.

இப்படிப்பட்ட சக்திகள்-குறிப்பாக வெகுஜன-தன்னார்வக் குழுக்கள்- மக்களின் போராட்ட குணாம்சங்களை கேலிக்கூத்தாக்குவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியுள்ளன. 94 அலைக்குப் பின்னர் காத்திரமான போராட்டங்களை இது வரை இந்த சக்திகள் நடத்தியதில்லை. ஆர்ப்பாட்டம் என்கின்ற பெயரில் சர்வதேச நினைவு தினங்களில் செய்யப்படும் ஆர்ப்பாட்­டங்களைக் கூட காலாகாலத்தில் நடைபெறும் சம்பிரதாய மதச் சடங்குகளைப் போல ஆக்கி அவற்றின் காத்திரத்தை இழக்கச் செய்து மக்களை சலிப்படையச் செய்வதில் இச்சக்திகள் ஆற்றிய பாத்திரம் அபாரமானது.

இப்படிப்பட்ட சலிப்பும், வெறுப்பும், ஆத்திரமும் இந்த கட்டமைப்பை நோக்கியும், இக்கட்டமைப்பை பாதுகாக்கின்ற இயந்திரங்களின் மீதும் மையப்படுத்தக்கூடிய, மையப்படுத்த வேண்டிய முக்கிய சக்திகள் அனைத்தும் அரசாங்கத்தை பாதுகாக்கின்ற நிலையில் மக்களை விழிப்பூட்டுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்­பட்டதாகவே உள்ளது. அல்லது முட்டுக்கட்டை போடப்பட்டதாகவே உள்ளது. இந்த நிலையானது அத்தனை துயரங்களும் உருமறைப்பு செய்யப்பட்டு மக்களின் போராட்ட அலை தணிக்கப்பட்டு ஒரு இன்று கிளர்ச்சிகர அலைக்குhpய காலமாக இல்லாமல் ஆக்கிவிட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலை பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சிக்கும் காரணமானது. பிரேமதாச காலத்தில் அறுபதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையான மாற்றுப்பத்திரிகைகள் இன்று பத்தா­யிரத்துக்கும் குறைவாக ஆகியிருப்பதும் இதன் விளைவாகவே. சகல பத்திரிகைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டது. எனவே அப்படி ஒரு கிளர்ச்சிகரமான சூழல் அமையப்படாத நிலையில் வெகுஜன-அரசியல் மற்றும் செய்திப் பத்திhpகைகளின் ஆரம்பிப்புகள் வர்த்தக நோக்கமற்றவையாகத் தான் இருக்க முடியும். விற்பனையை இலக்காகக் கொண்டு இந்தச் சூழலில் பத்திhpகைகள் தொடங்கப்படுவதென்பது சந்தை நிலைவரத்தை சரியாக அறியாததாகத்தான் இருக்க முடியும். மேலும் அப்படி தொடங்கப்படுபவை ஏலவே உள்ளவற்றிலிருந்து மாறுப்­பட்டிருப்பதும் நிபந்தனைக்குரியவை. இருப்பனவற்றை செய்ய இன்னொன்று எதற்கு?
புதிய வரவு எதன் அறிகுறி?

எனவே இப்படிப்பட்ட நிலையில் பத்திhpகைகள் பலவற்றின் வரவு ஆச்சிரியத்தை ஊட்டுகின்றன. சில பத்திhpகைகள் புதியனவற்றைத் தொடுகின்றன. இவை ஓரளவு இருப்புக் கொள்கின்றன. ஆனால் சமீப காலமாக சிங்களச் சூழலை எடுத்துக் கொண்டால் புதிதாக முளைக்கின்ற பல பத்திரிகைகள் ஏனையவற்றிலிருந்து பெரிதாக மாறுபடவில்லை. வாராந்தப்பத்திரிகைகள் மாத்திரம், ச(த்)திய, யுக்திய, ராவய, சத்தின, நிதஹாச, அரட்டுவ... என பத்திரிகைகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை விட மாதமிருமுறை, மாதாந்தம் என்றும் வேறு பத்திரிகைகளும், பல சஞ்சிகைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் அரட்டுவ பத்திரிகையின் தோற்றம் நிச்சயமாக வர்த்தக நோக்கைக் கொண்டிருக்க முடியாது. விளம்பர அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காகத் தான் இருக்க முடியும். டிசம்பர் 11ஆம் திகதியிலிருந்து மாதாந்தமாக வெளிவரத் தொடங்கியிருக்கும் ”சத்தின' எனும் இன்னுமொரு பத்திரிகையின் நோக்கத்தைத் தேடிப்பார்த்த போது சுனில் அபேவர்தன என்பவர் (இவர் முன்னாள் நவ சமசமாஜக்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் குசலா அபேவர்தனவின் மகன். இன்று இலங்கைக்கான கோக்காகோலா கம்பனியின் பெருமளவு பங்குகள் இவருக்கு உரியது. இவர் இப்பத்திரிகையைத் தவிர ”நிதஹச” (சுதந்திரம்) மற்றும் ”Independent” எனும் பெயரில் கலரில் 40 கிராம் வெள்ளைத்­தாளில் ஆங்கில வாராந்தப் பத்திரிகையையும் தொடக்­கியிருக்கிறார். இது ஒக்டோபரில் இருந்து வெளி­வரத் தொடங்கியுள்ளது.) தான் எதிர்கால அரசியல் நுழைவுக்கு களமமைக்கின்ற நோக்கிலேயே இந்த பத்திரிகைகளை தொடக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வகையில் அரட்டுவ பத்திரிகைக்கும் நிச்சயம் ஒரு நோக்கமுண்டு. அந்த நோக்கம் தனது வர்த்தக ஏகபோகத்தை சுயவிளம்பரம் செய்கின்ற நோக்கமாகவும் இருக்கலாம், அல்லது எதிர்கால அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஏற்கெனவே சிங்கள வர்த்தகர்களைப் பலப்படுத்துவதே தமிழ்த் தேசியத்தை வீழ்த்த முக்கிய ஆயுதமென்று சிங்கள வீரவிதான இயக்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள வர்த்தகர் சங்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் பயங்கரவாத பூச்சாண்டித் தனத்தைப் பயன்படுத்தி தமிழ் வர்த்தகர்களை விரட்டுவது, விட்டுவிட்டு ஓடச்செய்வது, அவற்றைக் கைப்பற்றுவது, புதிய தமிழ் வர்த்தகர்களுக்கான வாய்ப்புகளை கிடைக்­­காமல் செய்வது என அவ்வி­யக்கம் ஏற்கெனவே பணிகளை ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் சிங்கள வர்த்தகர்களைப் பலப்ப­டுத்துகின்ற அந்த தந்திரோபாயங்களில் ஒன்று தான் இந்த அரட்டுவ பத்திரிகையா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் பெண் தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், பெரு முதலாளிகள், என பல தரப்பினரது கட்டுரைகள், வெளிவந்திருக்கின்றன. ஆனால் இது வரை வெளிவந்துள்ள ஐந்து இதழ்களில் தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்களைப் பற்றியோ தமிழ் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இனவாத சிக்கல்கள் குறித்தோ எதுவும் எழுதப்படாதது இந்த சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

மூலதனத்துக்கு ஆபத்து?

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்தோடு 20 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 20 வருடகால விளைவாக இலங்கை அந்நியநாடுகளின் முதலீடுகளை நிபந்தனையின்றி திறந்துவிட்டுள்ளது. இன்று மனித வளம், இலங்கையின் கனிய வளம் என இலங்கையின் தேசிய சொத்துக்கள் அத்தனையும் அந்நியருக்கு சுரண்ட வழிதிறந்துவிடப்பட்டுள்ளமையானது உள்ளூர் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை அந்நிய முதலீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து சுதேச சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுக்கின்ற தரகர்களாக ஆக்கியது. உற்பத்தித்துறையைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகளையும் பல்தேசிய தரகு முதலாளிகளாக ஆக்கியது. இப்படிப்பட்ட தரகர்களில் ஒருவரே இந்த லலித் கொத்தலாவல.

அண்மைய இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் வர்த்தக சமூகத்தின் முயற்சியையும் கூட இந்தப் பின்னணிகளோடு தான் நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை வன்முறைகள், குண்டு வெடிப்புகள், யுத்த நெருக்கடிகள் என்பற்றின் காரணமாக வெளிநாட்டு (கூட்டு) மூதலீடுகளுக்கான ஆபத்து நேர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை எனும் சந்தை மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களின் மூலதனமும் சேர்த்து பாதிக்கப்படுகிறது. எனவே தான் இன்று தவிர்க்க முடியாமல் இந்த முதலாளித்துவ வர்க்கத்தினர் (அந்நிய முதலீட்டாளர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும்,) தவிர்க்க இயலாமல் நேரடியாகவே அரசியலில் தலையிட வேண்டியவர்களாக ஆகினர். அதன் விளைவு தான் வர்த்தக சமூகத்தின் சர்வ கட்சி மாநாடு மற்றும் இத்தியாதிகள்.

லலித் கொத்தலாவல மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது செலிங்கோ நிறுவனத்தில் வைத்து காயப்பட்டு இரத்தம் சிந்தியவரென்றும், அவரது ஒரு கண் அதிகம் பாதிக்கப்பட்டதென்றும் எனவே அவரால் இனப்பிரச்சினையின் கோரத்தை நேரடியாகவே அனுபவிக்க முடிந்தவர் என்றும் ”சர்வகட்சி மாநாட்டு” முயற்சிகளில் இவரின் பாத்திரமும் அந்தப் பின்னணிகளைக் கொண்டது என்றும் கூறுகின்ற சிலரும் உள்ளனர். ஆனால் முதலாளித்துவத்தின் வடிவத்தையும் அதன் தந்திரோபா­யங்களையும் விளங்கிக்கொள்கின்ற எவருக்கும் அவை காரணங்­களாக இராது.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு முதலாளியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பத்திhpகையையும் அவரின் பின்னணி பணிகளையும் முதலாளித்துவக் கூட்டு தனது மூலதனத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவதானம் கொள்வதன் மூலமாக இந்த பத்திhpகையின் வரவை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்.

இதே வேளை ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தமிழ் சிவிலியன்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் எப்படி சிங்களப் பத்திரிகைகளில் பேசாப்பொருளாக வைத்திருக்கும் பெரும்போக்கு தொடர்கின்றதோ அது போல தமிழ் பத்திரிகைகளில் இது தங்களின் தேசம் என்கின்ற உணர்வுக்கு வாய்ப்பற்றவர்களாக ஆக்கப்­பட்டதனாலோ என்னவோ ”ஒட்டு மொத்த” இலங்கையின் தேசிய அபிவிருத்தி, பொருளாதாரம் போன்ற விடயங்களும் தமிழ்ச் சூழலில் பேசாப்பொருளாக இருக்கின்றன. சிங்களப் பத்திரிகைகளில் தேசிய அபிவிருத்தி, தேசிய சீரழிவுகள், தேசிய பொருளாதாரம் சிவில் நிர்வாகம் என்பன குறித்து அதிகம் பேசப்படுகிற அதே வேளை தமிழ் பத்திரிகைகளில் இவை குறித்து அதிகமாக அலட்டிக்கொள்ளாத போக்கை எவரும் அடையாளம் காணலாம்.

அந்த வகையில் இந்த அரட்டுவ எனும் பத்திரிகையின் வரவு மேற்கூறிய காரணங்களோடு சிங்களச் சூழலில், பொருளாதாரம் குறித்த விடயத்தை மட்டுமே பேசுபொருளாக்கியிருக்கும் தனிப்பத்திரிகையாகவும் கொள்ளலாம்.